×

குட்கா முறைகேடு வழக்கில் 8 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி: நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறி, அதுதொடர்பான கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022 நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசு அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன் காரணமாக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றியஅரசு அனுமதியளித்தது தொடர்பான கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post குட்கா முறைகேடு வழக்கில் 8 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி: நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Gutka ,CBI ,Chennai ,Union government ,
× RELATED போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு...